Monday 22 July 2019

ரயிலிலே ஓர் அமைதி!




ரயிலிலே ஓர் அமைதி!


மானுட குலத்தின் சகல பயண வழிகளிலும் சுவாரஸ்யமானது ரயில் பயணம்தான். என் அனுபவங்களை வார்த்தைகள் வழியே சிலாகித்ததைப் படித்தால் நீங்களும் அதை ஆமோதிப்பீர்கள்.

எவ்வளவு சீக்கிரம் ஸ்டேஷனுக்குச் சென்றாலும் மெல்லிய பதற்றம் இல்லாம லில்லை. சரியான பிளாட்பாரம் தானா என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை பார்த்து, அதுவும் போதாமல் அதே டிரெயினைப் பிடிக்கப் போகிறவருக்கும் அதே பிளாட்பாரம் தானா என நோட்டம்விட்டு நகர்வதில் தொடங்குகிறது அந்தச் சுவாரஸ்யம். இந்திய ரயில்வேக்கு, `இந்தியர்களுக்கு எந்தக் காலத்திலும் மூட்டுவலியே வராது!' என்ற அசாத்திய நம்பிக்கை உண்டு. ரயிலுக்குள் புதுசு புதுசாக ஆயிரம் சொகுசுகள் தர ஆசைப்படுபவர்கள், குடிமக்கள் பிளாட் பாரம் மாற, நூறு படி ஏறி, நூறு படி இறங்கி, சக்கரம் வைத்த பெட்டியை மூச்சிரைக்கத் தூக்கிவருவதைப் பார்த்தும் `மனம் இரங்க மாட்டேன்' என்று அடமாக இருக்கிறார்கள்.

இதை தேசபக்தர் யாரிடமாவது சொல்லிப் புலம்பினால், `அதான் தாம்பரத்தில் எஸ்கலேட்டர் இருக்கே!' என்பார்கள். அது சரிதான், நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குப் போக வேண்டும். எஸ்கலேட்டருக்காக தாம்பரம் வந்து ஏற முடியுமா என்ன? என் பாட்டி ஒவ்வொரு பயணத்தின்போதும், பல பிரார்த்தனைகளில் ஒன்றாக, `முதலாவது பிளாட்பாரத்துக்கு டிரெயின் வரணும்' என்று பெருமாளிடம் அப்ளிகேஷன் போட்டுவைப்பாள். அது என்ன கஷ்டம் என்று பாட்டி ஆவதற்குள்ளேயே எனக்குப் புரிந்துவிட்டது.

`நான் பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன்' என்று யாருக்காவது அலைபேசியில் சொன்னால், `ரொம்ப நல்லது' என்று பதில் கிடைக்கும். நடைமேடையில், எப்போதும் பெரிய பெரிய மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருக்கும் குடும்பம் சாவகாசமாக இருக்க, கையில் சிறிய பையோடு இருக்கும் முதியவர் மட்டும் உர்ரென இருப்பார். `இந்தப் பெரிய குடும்பத்துக்கு முன், தான் ஏறிவிட வேண்டுமே' என்று கவலை அவரை நிலைகொள்ளாமல் வைத்திருப்பதை யூகிக்கலாம்.

ரயிலிலே ஓர் அமைதி!
தேவையே இல்லையென்றாலும், அடித்துப் பிடித்து ஒருவழியாக ரயிலில் ஏறி சீட்டைக் கண்டுபிடித்து உட்கார்ந்து, வழி அனுப்ப வந்தவருக்குக் கையசைத்து, பைகளையெல்லாம் காலுக்கு அடியில் தள்ளி விட்டுவிட்டால் பதற்றம் போய்விடும் என நினைத்தீர்கள் என்றால், அதுதான் இல்லை.

ரயில் கிளம்பி டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைச் சரிபார்த்துச் சொல்லும் வரை இந்தப் பதற்றம் இருக்கிறது. `நார்த் இண்டியால எல்லாம் யாரும் டிக்கெட்டே வாங்கிறதில்லை. பிகாரிஸ் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல ஏறி நம்ம இடத்துல உட்கார்ந்துட்டாங்கன்னா, டிடிஆர் கூட ஏன்னு கேட்க முடியாது!’ என்பதுதான் காசிக்குப் போய் வந்தவர்கள் பலமுறை சொல்லும் கதை. கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போவதற்குள் எந்த பிகாரி வந்து என் இடத்தைப் பறிக்கப்போகிறான்? இருந்தாலும் கேள்விஞானத்தை மறக்காமல் கொஞ்சமாவது பதற்றப்பட்டு வைக்க வேண்டியிருக்கிறது.

ரயில் கிளம்புவதற்குள் எதிர் சீட்டில் இருப்பவரிடம் வழி அனுப்ப வந்தவர் நட்பாகிவிடும் காலமெல்லாம் உண்டு. பிரயாணம் தொடங்கிய அரை மணிக்குள்ளாகவே அருகில் இருப்பவர் களோடு, `எந்த கம்பெனி ஷேரில் எவ்வளவு போடலாம்', `இன்ஜினீயரிங் படிப்புக்கு இனி வேல்யூ இல்லை', `குழந்தை வரம் தரும் கடவுள்', `ரஜினி அரசியலுக்கு வரணும் சார்' என சகலமும் பேசுவார்கள். இவ்வளவு ஏன், பரஸ்பர ஜாதகப் பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கிறது. என் பெரியம்மா எதிரில் இருப்பவரோடு பேசிப் பேசியே, மூன்று தலைமுறைகளுக்கு முன் எங்கோ சொந்தம் இணைந்திருந்ததைக் கண்டுபிடித்த பிறகு நடந்தது அது.

என் பால்யத்தில் ரயில் பயணம் என்றால், முன்னதாகவே அம்மாவிடம் `டீல்’ பேசிவிடுவோம். போகும்போது எனக்கு ஜன்னலோரம் என்றால், வரும்போது என் தம்பிக்கு ஜன்னலோரம். சமீபமாக கவனித்ததில், சிறார்களும் இளைஞர்களும் ஜன்னலோரத்துக்கெல்லாம் ஆசைப்படுவ தாகத் தெரியவில்லை. அவர்கள் உலகத்துக் கான ஜன்னல் அலைபேசியில் இருக்கிறது.

அப்பர் பெர்த்தில் இளைஞனோ, இளைஞியோ மொபைல் மற்றும் ஹெட் போனோடு ஏறிப் படுத்துக்கொண்டால், இறங்கும்வரை அவர்கள் முகத்தை உங்களால் பார்க்க முடியாது. வெளியே, பின்
னோக்கி ஓடும் மரங்களையும், க்ராஸிங்கில் கையாட்டக் காத்திருக்கும் குழந்தைகளையும், ஐந்தாகப் பிளந்து காரம் தூவிக் கிடைக்கும் கொய்யாப் பழங்களையும் அவர்கள் திரையில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் மாமா ஒருவர், அடிக்கடி மேலைநாடுகளின் புராணம் பாடுபவர். அவர் சொன்னது, `அங்க டிரெயினெல்லாம் நிசப்தமா இருக்கும் தெரியுமா? நம் ஊர் மாதிரி காரே பூரே என்று யாரும் பேசிக்கொண்டு வருவதில்லை'.  அமைதியான ரயில் எப்படி இருக்கும் என்று சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். இப்போது வெளிநாட்டுக்காரனே நம்மாள்களுக்கு மொபைல்போன் தந்து வாயடைத்து விட்டான். தாத்தா பாட்டிகள்கூட, பயணத்தின்போது நிமிர்ந்தே பார்க்காமல் வாட்ஸ்அப் செய்திகளை வாசிக்கும் அளவு பிஸியாக இருக்கிறார்கள்.

மிகக் கடுமையான குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனைகளில் ஒன்று, ஒரே பாடலை நாள் முழுவதும் வருடக்கணக்கில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பி, பிறகு அந்தப் பாடலை நிறுத்தினால் பைத்தியம் பிடிக்குமாறு செய்துவிடுவார்களாம். போன பிறவியில் ஏதாவது பாவம் செய்திருந்தீர்களானால், அத்தகைய தண்டனையின் சாம்பிள் ரயிலில் கிடைக்கிறது. 

இதோ, என் எதிரில் இருக்கும் மூன்று வயது குழந்தைக்குப் பிடித்த ரைம்ஸ் `வீல்ஸ் ஆன் தி பஸ்'தான். எப்படித் தெரியும் என்கிறீர்களா? ஏறினதிலிருந்து இதுவரை இருநூற்று சொச்சம் முறை அத்தனை பேரும் கேட்டிருப்போம். நானாவது பரவாயில்லை, இந்த ரயில் இன்னும் இருநூறு கிலோமீட்டர் போகப்போகிறது.

குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் எளிமையான வழியாக இப்போது அலைபேசி இருக்கிறது. கண்பார்வை நிலையானதும் மொபைலில் பாடல் போட்டுப் பார்க்கக் கற்றுத் தந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சாப்பாடு, தூக்கம் தவிர்த்து எதற்கும் அம்மாவைத் தேடுவதில்லை. முன்பெல்லாம் வகுப்புக்கு ஒரு கண்ணாடிப் பெண் இருப்பாள். இப்போது வகுப்பில் கண்ணாடி இல்லாத குழந்தை இருந்தாலே பெரிய விஷயம். கடவுள், அடுத்தடுத்த வெர்ஷனில் அலைபேசி ஒளிக்குத் தகவமைத்துக்கொள்ளும் மானுட இனத்தைப் படைப்பதைப் பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.

ரயிலிலே ஓர் அமைதி!
இன்னமும் மாறாமல் இருப்பது ஒன்றுதான். `சூடும் சர்க்கரையும் இருந்தாலே அது தேநீர்தான்' என்று ஐஆர்சிடிசி நம்புவது. ஆயினும், அதைப் பருகாமல் பயணங்கள் ருசிப்பதில்லை. உணவு என்றதும் எனக்கு நினைவில் இருக்கும் மற்றொரு விஷயம், சக பயணிகளோடு பங்கிட்டு உண்டது. மயக்க பிஸ்கட் கொடுத்துக் கொள்ளையடித்த புண்ணியவான் யாரோ தெரியாது, ஒரு தேசத்தின் பயணப் பண்பாட்டையே மாற்றிவிட்டான்.

மார்வாடிகள் விதவிதமாக உண்பார்கள். கேரளாக்காரர்கள் பிரயாணத்தின் போதுகூட மீனைத் தேடுகிறார்கள். ஆந்திராக் காரர்களுக்கு உணவில் காரம் தூக்கலாக இருக்கும் என்பதெல்லாம் பயணங்களில் பார்த்தே கற்றுக்கொண்டோம். அநேகமாக இப்போதெல்லாம் பயணிகள், எடுத்து வந்த உணவைத் திரும்பி உட்கார்ந்து உண்கிறார்கள். அப்படியே அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்தாலும், யாரும் வாங்கத் தயாரில்லை.
முந்தைய தலைமுறையிடம் நான் மிகவும் ரசிக்கும் விஷயம் ஒன்று உண்டு. இளைஞர்கள் பிரயாண அலுப்போடு கலைந்த தலையோடு இறங்கிப் போகையில், வயதானவர்கள் சிரத்தையாக முகம் கழுவி, தலைவாரி, பவுடர், பொட்டு என ஃபிரஷ்ஷாக இறங்குவார்கள். போகும் இடம் அவர்கள் வீடுதான் என்றாலும்கூட, கலைந்த தலையோடு ரயிலிலிருந்து இறங்கும் முதியவர்களைப் பார்ப்பது மிக மிக அரிது.

முன்பு எப்போதையும்விட, மக்கள் பயணங்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். விடுமுறை வந்தால், புதுப்புது இடங்களுக்குப் போவதைப் பற்றியும், தங்குமிட வசதிகள் குறித்தும் திட்டமிடுகிறார்கள். பயணம் என்பது வீட்டிலிருந்து அடி எடுத்து வைப்பதிலிருந்தே தொடங்குவதாகத்தான் நினைக்கிறேன். ரயிலில் சிநேகிதங்களை மறுத்து, எதையும் கவனிக்கும் ஆர்வமில்லாமல், போன இடத்தில் உல்லாச விடுதியில் தங்கி, புகைப்படங்கள் எடுத்து, ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து, வந்த லைக்ஸைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ஊர் திரும்புவதால், பயணங்களில் கற்றுக்கொள்ள வேண்டியதில் பெரும்பகுதியை இழந்துவிடுகிறோம்.

(ரயில் பயணங்களில்... விக்னேஸ்வரி சுரேஷ், ஓவியங்கள் : ரமணன்)
எளிமைக்கான ஆஃபர்

உங்களுக்கு தெரியுமா, பேஸ்ட்டை அளவாக பிதுக்கி பிரஷ்ஷில் போட்டுத்தர மிஷின் இருப்பது? விரலை உள்ளே விட்டால் நகத்தை நறுக்கிவிடும் மிஷின்? தண்ணீர் பாட்டிலை சரிக்காமல் டம்ளரில் நிரப்பித்தரும் உபகரணம்? அட.. காது குடைந்து விடும் சாதனம்?  இதுக்கெல்லாம் எவனாவது மிஷின தேடுவானா என்கிறீர்களா? இப்படி நூற்றுக்கணக்கான சாமான்கள் இணையத்தில் விற்பனைக்கு இருக்கின்றன. உங்களை எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் போதை உள்ளவர்களாக (விக்கிப்பீடியா பாஷையில் 'ஓனியோமேனியா' ஆசாமி) மாற்றிவிட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது இணைய வணிகம்.

அம்மா அப்பா தவிர்த்து தற்போது எதையும் இணையம் மூலம் வாங்கி விட முடிகிறது. இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் மாநகரத்தின் கார்பன் புகை போல் தப்பிக்க முடியாதளவு நம்மை சூழ்ந்துக் கொண்டாலும், எங்கே அதற்கான 'லட்சுமணன் கோடு' வரைவது என்பது இன்னமும் கூட நம் கையில் தான் இருக்கிறது.  

ஆன்லைனில் சாமான்கள் வாங்குவதில் உள்ள மிகப்பெரிய சவால், சமயத்தில் இணையத்தில் பார்த்ததற்கும் கையில் இருப்பதற்குமான ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்கள் தான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையெல்லாம் ஓல்ட் ஃபாஷன். பிள்ளையார் ஆர்டர் செய்து குரங்கு டெலிவர் ஆவது தான் இப்பொழுது சரியாக வரும். 

என் தோழிக்கு சகலமும் இணையம் தான். லெங்கிங்ஸ் ஆர்டர் செய்வாள். சாக்ஸ் சைஸில் வந்து சேரும். சரி, எப்போதாவது ஒல்லியானால் போட்டுக்கொள்ளலாம் என்று எடுத்துவைத்துக்கொள்வாள். படுக்கை விரிப்பு கேட்டால் போர்வை வரும். 'இருக்கட்டும், உறவினர் வந்தால் தேவைப்படும்'. கணிணி திரை பேபி பின்க்'காக காட்டிய புடவை கைக்கு வரும்போது மிட்டாய் ரோஸாக மாறியிருக்கும். 'அதனாலென்ன, எனக்கு தான் மிட்டாய் பிடிக்குமே'. இவற்றை கன சிரத்தையாக மாற்ற அல்லது பணத்தை திரும்ப பெற நிறைய பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் இணைய வர்த்தம் பக்கம் தலை வைத்தே படுக்க கூடாது.

நண்பன் ஒருவன் இருபத்தி நான்கு கடிகாரம் வைத்திருக்கிறான். என்ன லாஜிக்கோ?!  நல்லவேளையாக ஆன்லைனில் காலண்டர் வாங்குவதில்லை. அவனோடு தெருவில் இறங்கினால், 'என்னண்ணே.. இந்த வாரம் இதுவும் வாங்கலையா?' என்று கூரியர் பையன்கள் எப்படியோ சிரிக்காமல் கேட்கிறார்கள்.  ஷாப்பிங் செய்ய இடஞ்சலாக இருப்பதால் காதலை முறித்துக் கொண்டதாக, வாழ்கைத்துணை விவாகரத்து வரை போனதாக  தென்படும் இளைஞர்களின் வலைத்தள பதிவுகள் திகிலூட்டுகின்றன.

மிகப் பெரிய இணைய நிறுவனத்தின் 'பிக் பில்லியன் டே' மஹாத்மா பிறந்த நாளில் வருகிறது. 'இந்த பூமியால் அனைவர் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும் ஆனால் பேராசைகளை அல்ல' என்றாரே, அதே மஹாத்மா தான். ஏதோ அவர் பிறந்த நாளுக்கு விடுமுறை கிடைப்பதால், ரூபாய் நோட்டில் தென்படுவதால் பெயர் அளவிளாவது தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்கு மேல் அவர் சொல்லிச் சென்றதெல்லாம்  யாருக்கு தெரியும். காந்தி பொன்மொழிகள் போட்ட டீஷர்ட் ஆன்லைனில் கிடைக்கிறதா பார்க்கலாம்.

நீங்கள் யார், ஆணா, பெண்ணா, சராசரியாக இணையத்தில் எத்தனை நேரம் செலவிடுகிறீர்கள், எது மாதிரியான பொருட்கள் உங்களை ஈர்க்கின்றன, சமூக வலைத்ததளங்களில் என்ன பகிர்கிறீர்கள், எதை விரும்பிகிறீர்கள் என பலதும் AdSense, Browser Cookies  போன்ற டெக்னிகல் சமாச்சாரங்களின் துணையோடு கண்காணிக்க படுகிறது. பெற்றவளையும்  விட மேலாக உங்களைப் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, இணையத்தில் நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களுக்கு பிரியமான பொருட்களாக கடைபரப்ப படுகிறது.

கீதை சொல்லும் ஐம்புலன்களினால் வரும் வாசனைகளில்(ஆசைகள்) இது என்ன வகையோ. எனினும் இதை கடப்பதுவ்ம் கடினமாகவே இருக்கிறது. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவரி, கேஷ் பேக் என பல கட்டுக்கள் நம் காலை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கின்றன. இனி கடவுள் அவதரித்தால், விழாக்கால தள்ளுபடியில் தடுக்கி விழாமல் கடப்பதே வாழ்வின் அடுத்தப் படியாக உபதேசித்திருப்பார்.


உங்களுக்கு தினசரி வரும் மின்னஞ்சலில் "ஆஃபர்" மெயில்களே பிரதானமாய் இருக்கிறதென்றால், ஏற்கனவே வீட்டில்இருக்கிற பொருட்களையே மறந்து திரும்ப வாங்குகிறீர்கள் என்றால்,கூரியர் கொண்டுவரும் பையன்கள் உங்களை வெளியிடத்தில் பார்த்தால் கூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றால், நண்பர்கள், உறவுகளோடு செலவிடும் நேரத்தை ஷாப்பிங்கிற்க்கு இடஞ்சல் என்று நினைப்பீர்களேயானால், எப்போதும் உங்கள் கணிணியில் ஒரு திரை விற்பனை தளத்திற்காக திறந்திருக்கும் என்றால்,ஷாப்பிங் செய்யாவிட்டால் மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால்,எதுவும் வாங்காவிட்டாலும் சதா ஆன்லைன் ஷாப்பிங் பற்றின சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தால், மென்மையாக சொல்லவேண்டுமானால் உங்களுக்கு வந்திருப்பது அடிக்‌ஷன்! பூசி மெழுகாமல் சொல்வதானால், "முத்திடுச்சி".


உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் வந்தமர்ந்து, சரி இந்த ஆன்லைன் ஷாப்பிங் போதையை விட்டொழிப்போம் என தோன்ற வைத்தால், கடைப்பிடிக்க சுலபமான பல வழிகள் இருக்கின்றன. கைபேசி என்றால் எல்லா வர்த்தக ஆப்(app) களை அடியோடு தூக்கிவிடுவது, விளம்பர மின்னஞ்சல்களை unsubscribe செய்வது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை புது கோலம் போல பாவித்து, 'லபக்' என்று தாண்டிவிடுவது மற்றும் சிறிது நாட்களுக்கு எது வாங்குவதாகினும் முன்கூட்டியே பட்டியலிட்டு கடைக்கு நேரில் சென்று வாங்குவது. (பொதுவாக கண்டதையும் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் பெரு வர்த்தக கடைகளை விட சிறிய கடைகளையே நாடுவது நலம்.)


இணைய வணிகமே தேவையில்லை என்று சொல்ல வரவில்லை, அப்படி சொல்வதும் அபத்தம். 'பிராண்டட்' பொருட்களை நேரடியாக வாங்குவதால் போலிகளைத் தவிர்க்க முடிகிறது தான். நல்ல சலுகைகளும் கிடைக்கின்றன. நம்மிடம் இருக்கும் பொருட்களை மறுவிற்பனை செய்ய, ஏலத்தில் விட இணையம் சுலபமான வழி. ஆனால், அதன் மூலம் மி்ச்சமாகும் பணத்தை தண்டமாக வேறு ஒன்று வாங்குவதால் விட்டுவிடுவது தான் இளைய சமுதாயத்தின் பிரச்சனை. சமீபத்தில் சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சில இளைஞர்கள் கைதானார்கள். அதில் ஒருவர் காவல்நிலையத்தில் மரணமடைந்தார். அச்சம்பவத்தை பற்றி சமூக ஆர்வலர் ஒருவர், ' குப்பத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மாநகரத்தின் ஆடம்பரத்தை காண்கிறார்கள். அந்த வாழ்க்கை அவர்களை ஈர்க்கிறது. அப்படி அவர்களுக்கு வாழ வழியில்லாத போது, அது ஆற்றாமையாக மாறி குற்றச்செயல்களில் ஈடுபடவைக்கிறது' என்று பேட்டியளித்திருந்தார்.

ஆடம்பரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சமூக சீர்கேடுகளை விதைத்துக்கொண்டே தான் இருக்கிறது. நமக்கு முந்தய தலைமுறை வரை, பொருட்களை வாங்குவதற்கு முன், இது இல்லாமல் சமாளிக்க முடியுமா என்று யோசித்தார்கள். நாமோ வாங்கிய பின் அதற்கான பயன்பாட்டை யோசிக்கின்றொம். நம் ஆடைகளினால் அலமாரி நிரம்பி வழியும் போது, தேவைக்கு மீறினதை பகிர்ந்தளிக்கலாம், ஆடைகள் வாங்குவதை நிறுத்தலாம் அல்லது புதிய அலமாரி வாங்கலாம். மூன்றில் எது நம் விருப்பம் என்பதை தீர்மானிக்கும் உரிமை வணிகர்களிடம் இல்லை.

'இன்றைய தேதியின் உலகின் சிறந்த கைபேசி' என்ற ஒன்றை வாங்கினால், அந்த 'சிறந்த' பட்டம் அடுத்த சில வருடங்களில் அதே நிறுவனத்தின் அடுத்த கைபேசி வரவால் பறிக்கப்படுகிறது. சில சமயத்தில் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் நம் கைபேசி மாடல் பழையதாகிவிடுகிறது. உங்கள் 'பழைய' மொபைலை நாங்களே நல்ல விலைக்கு எக்ஸ்சேஞ் செய்துக் கொள்கிறோம். இதோ இதுவே இன்றைய தேதியின் சிறந்த கைப்பேசி என்கிறார்கள். மீண்டும் ஒரு பதட்டமான க்யூ வரிசையில் நம்மை இணைத்துக்கொள்கிறோம்.


ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் Minimalist Living என்னும் மிக குறைவான பொருட்களை கொண்டு வாழும் எளிய வாழ்க்கை முறைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 'தன்னிறைவு' மனம் சார்ந்த  விஷயம் என்பது புரிபடாதவரை யார் வேண்டுமானாலும் நம்மை அடிமைப்படுத்தலாம். ஆயினும் ஆடம்பரங்கள் ஒருகட்டத்தில் மனச்சோர்வை தந்து, தீர்வை யோசிக்க வைக்கும். அந்த தீர்வு, எளிமையான வாழ்வு தான் என்பதில் சந்தேகமேயில்லை.


(தினமணி. காமில் வெளியான கல்