Monday 22 July 2019

ரயிலிலே ஓர் அமைதி!




ரயிலிலே ஓர் அமைதி!


மானுட குலத்தின் சகல பயண வழிகளிலும் சுவாரஸ்யமானது ரயில் பயணம்தான். என் அனுபவங்களை வார்த்தைகள் வழியே சிலாகித்ததைப் படித்தால் நீங்களும் அதை ஆமோதிப்பீர்கள்.

எவ்வளவு சீக்கிரம் ஸ்டேஷனுக்குச் சென்றாலும் மெல்லிய பதற்றம் இல்லாம லில்லை. சரியான பிளாட்பாரம் தானா என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை பார்த்து, அதுவும் போதாமல் அதே டிரெயினைப் பிடிக்கப் போகிறவருக்கும் அதே பிளாட்பாரம் தானா என நோட்டம்விட்டு நகர்வதில் தொடங்குகிறது அந்தச் சுவாரஸ்யம். இந்திய ரயில்வேக்கு, `இந்தியர்களுக்கு எந்தக் காலத்திலும் மூட்டுவலியே வராது!' என்ற அசாத்திய நம்பிக்கை உண்டு. ரயிலுக்குள் புதுசு புதுசாக ஆயிரம் சொகுசுகள் தர ஆசைப்படுபவர்கள், குடிமக்கள் பிளாட் பாரம் மாற, நூறு படி ஏறி, நூறு படி இறங்கி, சக்கரம் வைத்த பெட்டியை மூச்சிரைக்கத் தூக்கிவருவதைப் பார்த்தும் `மனம் இரங்க மாட்டேன்' என்று அடமாக இருக்கிறார்கள்.

இதை தேசபக்தர் யாரிடமாவது சொல்லிப் புலம்பினால், `அதான் தாம்பரத்தில் எஸ்கலேட்டர் இருக்கே!' என்பார்கள். அது சரிதான், நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குப் போக வேண்டும். எஸ்கலேட்டருக்காக தாம்பரம் வந்து ஏற முடியுமா என்ன? என் பாட்டி ஒவ்வொரு பயணத்தின்போதும், பல பிரார்த்தனைகளில் ஒன்றாக, `முதலாவது பிளாட்பாரத்துக்கு டிரெயின் வரணும்' என்று பெருமாளிடம் அப்ளிகேஷன் போட்டுவைப்பாள். அது என்ன கஷ்டம் என்று பாட்டி ஆவதற்குள்ளேயே எனக்குப் புரிந்துவிட்டது.

`நான் பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன்' என்று யாருக்காவது அலைபேசியில் சொன்னால், `ரொம்ப நல்லது' என்று பதில் கிடைக்கும். நடைமேடையில், எப்போதும் பெரிய பெரிய மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருக்கும் குடும்பம் சாவகாசமாக இருக்க, கையில் சிறிய பையோடு இருக்கும் முதியவர் மட்டும் உர்ரென இருப்பார். `இந்தப் பெரிய குடும்பத்துக்கு முன், தான் ஏறிவிட வேண்டுமே' என்று கவலை அவரை நிலைகொள்ளாமல் வைத்திருப்பதை யூகிக்கலாம்.

ரயிலிலே ஓர் அமைதி!
தேவையே இல்லையென்றாலும், அடித்துப் பிடித்து ஒருவழியாக ரயிலில் ஏறி சீட்டைக் கண்டுபிடித்து உட்கார்ந்து, வழி அனுப்ப வந்தவருக்குக் கையசைத்து, பைகளையெல்லாம் காலுக்கு அடியில் தள்ளி விட்டுவிட்டால் பதற்றம் போய்விடும் என நினைத்தீர்கள் என்றால், அதுதான் இல்லை.

ரயில் கிளம்பி டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைச் சரிபார்த்துச் சொல்லும் வரை இந்தப் பதற்றம் இருக்கிறது. `நார்த் இண்டியால எல்லாம் யாரும் டிக்கெட்டே வாங்கிறதில்லை. பிகாரிஸ் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல ஏறி நம்ம இடத்துல உட்கார்ந்துட்டாங்கன்னா, டிடிஆர் கூட ஏன்னு கேட்க முடியாது!’ என்பதுதான் காசிக்குப் போய் வந்தவர்கள் பலமுறை சொல்லும் கதை. கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போவதற்குள் எந்த பிகாரி வந்து என் இடத்தைப் பறிக்கப்போகிறான்? இருந்தாலும் கேள்விஞானத்தை மறக்காமல் கொஞ்சமாவது பதற்றப்பட்டு வைக்க வேண்டியிருக்கிறது.

ரயில் கிளம்புவதற்குள் எதிர் சீட்டில் இருப்பவரிடம் வழி அனுப்ப வந்தவர் நட்பாகிவிடும் காலமெல்லாம் உண்டு. பிரயாணம் தொடங்கிய அரை மணிக்குள்ளாகவே அருகில் இருப்பவர் களோடு, `எந்த கம்பெனி ஷேரில் எவ்வளவு போடலாம்', `இன்ஜினீயரிங் படிப்புக்கு இனி வேல்யூ இல்லை', `குழந்தை வரம் தரும் கடவுள்', `ரஜினி அரசியலுக்கு வரணும் சார்' என சகலமும் பேசுவார்கள். இவ்வளவு ஏன், பரஸ்பர ஜாதகப் பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கிறது. என் பெரியம்மா எதிரில் இருப்பவரோடு பேசிப் பேசியே, மூன்று தலைமுறைகளுக்கு முன் எங்கோ சொந்தம் இணைந்திருந்ததைக் கண்டுபிடித்த பிறகு நடந்தது அது.

என் பால்யத்தில் ரயில் பயணம் என்றால், முன்னதாகவே அம்மாவிடம் `டீல்’ பேசிவிடுவோம். போகும்போது எனக்கு ஜன்னலோரம் என்றால், வரும்போது என் தம்பிக்கு ஜன்னலோரம். சமீபமாக கவனித்ததில், சிறார்களும் இளைஞர்களும் ஜன்னலோரத்துக்கெல்லாம் ஆசைப்படுவ தாகத் தெரியவில்லை. அவர்கள் உலகத்துக் கான ஜன்னல் அலைபேசியில் இருக்கிறது.

அப்பர் பெர்த்தில் இளைஞனோ, இளைஞியோ மொபைல் மற்றும் ஹெட் போனோடு ஏறிப் படுத்துக்கொண்டால், இறங்கும்வரை அவர்கள் முகத்தை உங்களால் பார்க்க முடியாது. வெளியே, பின்
னோக்கி ஓடும் மரங்களையும், க்ராஸிங்கில் கையாட்டக் காத்திருக்கும் குழந்தைகளையும், ஐந்தாகப் பிளந்து காரம் தூவிக் கிடைக்கும் கொய்யாப் பழங்களையும் அவர்கள் திரையில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் மாமா ஒருவர், அடிக்கடி மேலைநாடுகளின் புராணம் பாடுபவர். அவர் சொன்னது, `அங்க டிரெயினெல்லாம் நிசப்தமா இருக்கும் தெரியுமா? நம் ஊர் மாதிரி காரே பூரே என்று யாரும் பேசிக்கொண்டு வருவதில்லை'.  அமைதியான ரயில் எப்படி இருக்கும் என்று சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். இப்போது வெளிநாட்டுக்காரனே நம்மாள்களுக்கு மொபைல்போன் தந்து வாயடைத்து விட்டான். தாத்தா பாட்டிகள்கூட, பயணத்தின்போது நிமிர்ந்தே பார்க்காமல் வாட்ஸ்அப் செய்திகளை வாசிக்கும் அளவு பிஸியாக இருக்கிறார்கள்.

மிகக் கடுமையான குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனைகளில் ஒன்று, ஒரே பாடலை நாள் முழுவதும் வருடக்கணக்கில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பி, பிறகு அந்தப் பாடலை நிறுத்தினால் பைத்தியம் பிடிக்குமாறு செய்துவிடுவார்களாம். போன பிறவியில் ஏதாவது பாவம் செய்திருந்தீர்களானால், அத்தகைய தண்டனையின் சாம்பிள் ரயிலில் கிடைக்கிறது. 

இதோ, என் எதிரில் இருக்கும் மூன்று வயது குழந்தைக்குப் பிடித்த ரைம்ஸ் `வீல்ஸ் ஆன் தி பஸ்'தான். எப்படித் தெரியும் என்கிறீர்களா? ஏறினதிலிருந்து இதுவரை இருநூற்று சொச்சம் முறை அத்தனை பேரும் கேட்டிருப்போம். நானாவது பரவாயில்லை, இந்த ரயில் இன்னும் இருநூறு கிலோமீட்டர் போகப்போகிறது.

குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் எளிமையான வழியாக இப்போது அலைபேசி இருக்கிறது. கண்பார்வை நிலையானதும் மொபைலில் பாடல் போட்டுப் பார்க்கக் கற்றுத் தந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சாப்பாடு, தூக்கம் தவிர்த்து எதற்கும் அம்மாவைத் தேடுவதில்லை. முன்பெல்லாம் வகுப்புக்கு ஒரு கண்ணாடிப் பெண் இருப்பாள். இப்போது வகுப்பில் கண்ணாடி இல்லாத குழந்தை இருந்தாலே பெரிய விஷயம். கடவுள், அடுத்தடுத்த வெர்ஷனில் அலைபேசி ஒளிக்குத் தகவமைத்துக்கொள்ளும் மானுட இனத்தைப் படைப்பதைப் பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.

ரயிலிலே ஓர் அமைதி!
இன்னமும் மாறாமல் இருப்பது ஒன்றுதான். `சூடும் சர்க்கரையும் இருந்தாலே அது தேநீர்தான்' என்று ஐஆர்சிடிசி நம்புவது. ஆயினும், அதைப் பருகாமல் பயணங்கள் ருசிப்பதில்லை. உணவு என்றதும் எனக்கு நினைவில் இருக்கும் மற்றொரு விஷயம், சக பயணிகளோடு பங்கிட்டு உண்டது. மயக்க பிஸ்கட் கொடுத்துக் கொள்ளையடித்த புண்ணியவான் யாரோ தெரியாது, ஒரு தேசத்தின் பயணப் பண்பாட்டையே மாற்றிவிட்டான்.

மார்வாடிகள் விதவிதமாக உண்பார்கள். கேரளாக்காரர்கள் பிரயாணத்தின் போதுகூட மீனைத் தேடுகிறார்கள். ஆந்திராக் காரர்களுக்கு உணவில் காரம் தூக்கலாக இருக்கும் என்பதெல்லாம் பயணங்களில் பார்த்தே கற்றுக்கொண்டோம். அநேகமாக இப்போதெல்லாம் பயணிகள், எடுத்து வந்த உணவைத் திரும்பி உட்கார்ந்து உண்கிறார்கள். அப்படியே அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்தாலும், யாரும் வாங்கத் தயாரில்லை.
முந்தைய தலைமுறையிடம் நான் மிகவும் ரசிக்கும் விஷயம் ஒன்று உண்டு. இளைஞர்கள் பிரயாண அலுப்போடு கலைந்த தலையோடு இறங்கிப் போகையில், வயதானவர்கள் சிரத்தையாக முகம் கழுவி, தலைவாரி, பவுடர், பொட்டு என ஃபிரஷ்ஷாக இறங்குவார்கள். போகும் இடம் அவர்கள் வீடுதான் என்றாலும்கூட, கலைந்த தலையோடு ரயிலிலிருந்து இறங்கும் முதியவர்களைப் பார்ப்பது மிக மிக அரிது.

முன்பு எப்போதையும்விட, மக்கள் பயணங்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். விடுமுறை வந்தால், புதுப்புது இடங்களுக்குப் போவதைப் பற்றியும், தங்குமிட வசதிகள் குறித்தும் திட்டமிடுகிறார்கள். பயணம் என்பது வீட்டிலிருந்து அடி எடுத்து வைப்பதிலிருந்தே தொடங்குவதாகத்தான் நினைக்கிறேன். ரயிலில் சிநேகிதங்களை மறுத்து, எதையும் கவனிக்கும் ஆர்வமில்லாமல், போன இடத்தில் உல்லாச விடுதியில் தங்கி, புகைப்படங்கள் எடுத்து, ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து, வந்த லைக்ஸைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ஊர் திரும்புவதால், பயணங்களில் கற்றுக்கொள்ள வேண்டியதில் பெரும்பகுதியை இழந்துவிடுகிறோம்.

(ரயில் பயணங்களில்... விக்னேஸ்வரி சுரேஷ், ஓவியங்கள் : ரமணன்)

3 comments:

  1. மிகவும் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். ரசித்து படித்தேன். நானும் பல தடவைகள் வைகை எக்ஸ்பிரஸில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் பயணித்திருக்கிறேன். நீங்கள் சொன்னவைகளில் பலவற்றை கண்டு கேட்டு அனுபவித்திருக்கிறேன். அவைகள் எல்லாம் மனக்கண்ணில் ஓடின. இத்தனைக்கும் பிரயாணம் முழுவதும் யாரிடமும் ஒரு வார்த்தை பேசியதில்லை.அமைதியாக அமர்ந்திருப்பேன். நன்றி. துரை எஸ்.ஜெயச்சந்திரன்.

    ReplyDelete
  2. ரயில் சினேகிதங்களைப் போலவே வலைப்பூ சினேகிதங்களும் அருகிவிட்டதாக நினைக்கிறேன்.

    படித்ததோடு நின்றுவிடாமல், பின்னூட்டமளித்திருக்கிறீர்கள், மிக்க நன்றி! :)

    ReplyDelete
  3. ஒவ்வொரு இரயில் பயணமும் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன. எனது பல இரயில் பயணங்களில் மனிதர்களைக் கவனிப்பதை மட்டுமே செய்திருக்கிறேன். சில ஸ்வாரஸ்ய விஷயங்கள் பதிவுகளாகவும் எழுதியதுண்டு.

    தொடரட்டும் பதிவுகள்...

    ReplyDelete