Friday 4 November 2022

கொஞ்சம் கல்யாணம், கொஞ்சம் Affair.

கிபி 3022 



சாவித்திரி குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு நீதிபதி ரோபோ முன் சிலபல வயர்கள் சூழ அமர்ந்திருந்தாள். 

மை லார்ட் ஆரம்பித்தார். 

"சத்தியவானுடன் உங்கள் திருமணம் 30 நாட்கள் கடந்துவிட்டதா?"

"ஆமாம். அதற்காக பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தேன்." 

குறைந்தது முப்பது நாட்கள் ஆகியிருந்தால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.  

"சரி, என்ன உங்கள் பிரச்சனை?"

"எங்கள் திருமணத்தில் ரொமான்ஸ் இல்லை."

"அவர் உங்களோடு கலவி கொள்வதில்லையா?"

"அதில்லை. காலை எழுந்ததும் குட்மார்னிங் மட்டும் சொல்கிறார். அதனோடு ஒரு டார்லிங் சேர்ப்பதில்லை. வாட்ஸப் ஸ்டேடஸ் பார்க்கிறார், ஆனால் அதற்கு தகுந்த எமோஜி அனுப்ப இன்னமும் தெரியவில்லை. குறிப்பாக முத்தங்கள்! நேரில் தருமளவுக்கு சாட்'டில் அனுப்புவதில்லை. நான் வேறு ஆணைப் பற்றி பேசினால், செல்லமாக பொறாமை படுவதில்லை. எனக்கு சலிப்பாக இருக்கிறது."

"அவ்வளவு தானா?"

"எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபெக்‌ஷன். ரோபோ போல. " சாவித்திரி சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.  "அவர் எதை எடுத்தாலும் அதன் இடத்தில் வைத்துவிடுகிறார். வீடு கலைவதே இல்லை. அவரால் எனக்கு தாழ்வு மனப்பான்மையே வந்துவிட்டது."

"வேறு எதாவது? கள்ளத்தொடர்பு?"

"அவரை யாரும் காதலிக்க சாத்தியமில்லை. அலுவலக நேரம் முடிந்ததும் கணிணியை ஆஃப் செய்து விடுகிறார். பத்து மணிக்கு தூங்கிவிடுகிறார். குறிப்பாக ஃபோனில் லாக் இல்லை. எதாவது தொடர்பு இருக்குமா என்று கூட அவர் ஃபோனை சலித்து எடுத்துவிட்டேன்."

நீதிபதி இப்போது சாவித்திரியை உற்று நோக்கினார். "நீங்கள் வேறு யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறீர்களா?"

சாவித்திரி திடுக்கிட்டாள். நீதிபதிகளாக ரோபோக்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் பொய்கள் 99.99989 சதவிகிதம் குறைந்துவிட்டன. ரோபோக்கள் மனித உடல்மொழி பற்றி அக்குவேறு ஆணிவேறாக ஒரு மைக்ரோ செகண்டில் தெரிந்துக்கொள்கின்றன. குரலின் மிகச்சிறிய மாற்றம், கண்கள் போகும் திசை, தசைகளின் இறுக்கம், இதயதுடிப்பின் ஏற்ற இறக்கம், உதடுகள் விரியும் தன்மை என அத்தனையும் கவனித்து, நாம் சொல்வது பொய் என்றால், அத்தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சமயத்தில் நீதிமன்ற அவமதிப்பாக தண்டனையும் அனுபவிக்க வேண்டி வரும்.

"ஆமாம். ஃபேஸ்புக்கில் ஒருவரோடு. அவர் பெயர் இயமன்"

"ஆக, அது தான் நீங்கள் விவாகரத்து கோர உண்மையான காரணம் அல்லவா?"

"இயமனோடு பழகும் போது தான், என் திருமணத்தில் உள்ள குறைகள் தெளிவாக தெரிகின்றன. இயமன் என் மீது காதலை பொழிகிறார்."

"நியாயமாக உங்கள் கணவர் சத்தியவான் தான் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுக்கு திருமணம் சலித்துவிட்டது. ஒரு  மாற்றம் தேவைப்படுகிறது. மற்றவை நீங்கள் தேடிக்கொண்ட காரணங்கள். "

"என் காரணங்களில் உள்ள உண்மை உங்களுக்கு தெரியவில்லையா?"

"உங்கள் போதாமைகளை அவர் குறைகளாக மாற்றுகிறீர்கள்.  ஆகையால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை." 

சாவித்திரி எரிச்சலடைந்தாள். "எனக்கு விவாகரத்து வேண்டும். மேற்கொண்டு என்ன செய்யட்டும்?"

"சத்தியவானின் நலனை கருதி, விவாகரத்து வழங்கப்படுகிறது. தற்போது இருவருமாக வாங்கியிருக்கும் வீட்டை நீங்கள் அவருக்கு விட்டுவிட வேண்டும். ஜீவனாம்சமாக மாதம் மாதம்..."

"போகட்டும். இனி நான் இயமனை திருமணம் செய்ய தடை ஏதுமில்லை தானே?"

"இருக்காது. நீங்கள் சொன்ன ரொமான்ஸ் இல்லை போன்ற காரணங்களுக்காக இயமனின் மனைவியும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்."-

-----


விக்னேஸ்வரி சுரேஷ்

1 comment:

  1. Good one. But, names could have been changed. This story reminds me a story I read long ago, whose title or author I don't remember. You might have also read thiat story.

    A person fed up with his unromantic wife, after retirement, decides to go on a tour with a romantic fun loving woman and places an advertisement calling for willingness from such women to accompany him on the tour. From the letters he received, he chooses the woman he considers most romantic and asks her to meet him on a particular date/time in a particular place. He waits there eagerly only to see his wife also coming there as if looking for someone.

    ReplyDelete