Sunday 6 November 2022

மாண்புமிகு (குறுங்கதை)

கிபி 3022



ஆனந்தராஜுக்கு ரொம்ப பெருமை. மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் தன் உதவியாளராக ரோபோக்களை வைத்திருக்க, தலைவர் ஷாஜி மட்டும் அவனை தாண்டித் தான் ரோபோக்களை நம்புகிறார். அவனே அதைப்பற்றி பல முறை கேட்டும் இருக்கிறான்.

"தலைவரே..  நீங்க ஏன் என்னை கூட வச்சிருக்கீங்க?"

"அதொண்ணுமில்லடா. என்ன தான் ஆயிரம் மிஷின் வந்தாலும், தலைவரே, தலைவரேன்னு சக மனுஷன் கூப்பிடறத கேட்டுக்கிட்டு இருந்தா அரசியல்வாதியா கெத்தா இருக்கு."

ஏகப்பட்ட பேரை இல்லாமல் ஆக்கிவிட்டுத் தான் தலைவராகியிருந்தார், ஷாஜி. திருமணம் செய்துக் கொள்ளவில்லை. வாரிசும் இல்லை. அவருக்கு எதாவது ஆனால், கட்சியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும் அபாயம் இருக்கிறது. அதைப் பற்றி அவனிடம் மட்டும் கவலைக் கொள்வார்.

"எனக்கு அரசியல் கத்துத் தாங்க, தலைவரே. நம்பிக்கையா இருப்பேன்"

"போடா. அரசியல்லாம் யாரும் கத்துக்கொடுக்க முடியாது. அது ஜீன்ல இருந்தாத்தான் உண்டு."

"அப்ப, கல்யாணம் பண்ணிக்கிடலாமில்ல? உங்க பையன் கட்சிய வழி நடத்துவான்."

"அடப்போடா. தாஜ்மஹால் கட்டினவனுக்கு ஆன கதி தெரியுமில்ல? அரசியல்ல எவனையும் நம்ப முடியாது."

ஆனால் அப்படி ஓர் ஏற்பாட்டை ரகசியமாக செய்து முடித்திருப்பார் என்று அன்று காலை வரை ஆனந்த் ராஜுக்கு தெரியாது.

"எங்க போறோம், தலைவரே?"

"என்னோட க்ளோன பார்க்கப்போறோம். பல வருஷம் முன்னயே ப்ளான் பண்ணி ஏற்பாடெல்லாம் பண்ணிடேன். என் ஜீன வச்சே உருவாக்கித்தந்திருக்காங்கடா. இப்ப டெக்னாலஜி முன்னேற்றத்தால Ageing அதிகப்படுத்தி என் வயசுல இருக்க மாதிரி ஒருத்தன தந்திருக்காங்க. தனி வீட்ல வச்சிருக்கேன். "

"ஐ!! அப்ப எனக்கு இரண்டு தலைவரு!"

ஆனந்தராஜ் உற்சாகமாக விசிலடித்தான்.

அந்த இடம் அத்துவானக்காட்டில் இருந்தது. ரகசியத்திற்காக போலும். 

"நீ இங்க இருடா." தலைவர் மட்டும் உள்ளே போனார்.

அவன் நினைத்ததைக் காட்டிலும் அதிக நேரமானது. வரும் போது தலைவர் மட்டும் தான் வந்தார்.

ஆனந்தராஜ் குழப்பமாக பார்த்தான்.

"எங்க தலைவரே, க்ளோனு?"

"ஒரு உறைல இரண்டு கத்தி இருக்க முடியாதுடா. நீ வண்டிய எடு" 

தலைவர் திரும்பிப் புன்னகைத்தார். எப்போதும் மின்னும் தங்கப்பல்லை காணவில்லை. 


3 comments: