கிபி 3022
அந்த பேராசிரியர் தன் மாணவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.
"அது ஓர் அற்புதமான பிராஜெக்ட் தெரியுமா? மனிதனின் மூளையை ரோபோக்களுக்கு பொருத்துவது?! கிட்டத்தட்ட அவன் சாகாவரம் பெற்றுவிட்ட மாதிரி தான். தற்போது ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் இல்லை, அதையும் மனிதன் போலவே கொடுத்துவிட்டால்? அது தான் பிராஜெக்ட்டின் அடிப்படை நோக்கம்"
"பிறகு என்ன ஆயிற்று? மூளையை தர, மூளையுள்ள யாரும் முன் வரவில்லையா?" ஒரு குறும்புக்கார மாணவன் கேட்க, வகுப்பு சிரித்தது.
"இல்லை. நிறைய குடும்பங்கள் முன் வந்தன. இதுவும் Organ donation தானே? சாகப்போகும் நிலையில் உள்ள ஒருவரின் மூளையை தானமாக கேட்கிறோம். இதன் மூலம், அவர் வாழ்வாங்கு வாழப்போகிறார்."
"இதனால் என்ன பிரயோஜனம்?"
"மனிதனின் தசைகள், எலும்புகள், ஏன் ஒவ்வொரு செல்லுமே அழிந்துப்போகும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதுள்ள விஞ்ஞானத்தாலும் வயதாகும் வேகத்தை குறைக்கலாமே தவிர நிறுத்த முடியாது. ஆகையால் அவன் செத்து தான் ஆக வேண்டும்."
"அதற்காகத் தான் சாகாவரம் பிராஜெக்ட்'டா?"
"ஆமாம். மனித மூளை அபார சக்திக்கொண்டது. அதை அப்படியே பாதுகாத்து ரோபோவின் மற்ற இயக்கத்தோடு இணைத்துவிடால், சாகாத மனிதன் உருவாக்கிவிடலாம் என்று நினைத்தோம்."
"பிறகு என்ன ஆயிற்று? ஏன் அந்த பிராஜெக்ட்டை கைவிட்டீர்கள்?"
"மொத்தம் மூன்று மனித மூளைகள் கிடைத்தன. இரு ஆண்கள், ஒரு பெண் போபோக்களை மனித மூளையோடு உருவாக்கினோம். நம்ப மாட்டீர்கள், குரல் கூட அப்படியே மனித குரல் கொண்டுவந்துவிட்டோம்."
பேராசிரியர் கண்களை துடைத்துக் கொண்டார். அந்த குறும்புக்கார மாணவன் கூட வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான். வகுப்பில் பேரமைதி.
"அறிவு தான் மனிதனின் ஆயுதம். அவனை காப்பதும், அழிப்பதும் அதுவே.
ஆய்வகத்தில் இருந்த இரு ஆண் ரோபோக்களும் அந்த ஒரு பெண் ரோபோவையே காதலித்தன. அவள் இருவரையும் நிராகரித்தாள். மனமுடைந்த ஒரு ஆண் ரோபோ தற்கொலை செய்துக்கொள்ள, மற்றொன்று அவளையும் கொன்று, தானும் இறந்தது கிடந்தது."
------
விக்னேஸ்வரி சுரேஷ்
Nice story.
ReplyDelete