Saturday 5 November 2022

காவியக்காதல் (சிறுகதை)

கிபி 3022



"டாக்டர் கல்கி, இது என் அண்ணன், கரிகாலன். இவன் போன வாரம் நண்பர்களோட மார்ஸ்'க்கு டூர் போயிட்டு வந்தான். வந்ததிலிருந்தே இப்படி தான் பேயடிச்ச மாதிரி இருக்கான். ஒழுங்கா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லை."

குந்தவை சொல்லிக்கொண்டே போனாள். அவள் சொல்லாவிட்டாலும் அந்த ரோபோ டாக்டருக்கு அவள் சொன்ன எல்லா தகவல்களும் கரிகாலன் கட்டியிருந்த வாட்ச் மூலம் தகவலாக தரப்பட்டிருந்தது. கொஞ்சம் சீரியஸ் பேஷண்ட் தான் என்பதால் முன்னுரிமை தந்து அப்பாயிண்மெண்ட் அளிக்கப்பட்டிருந்தது.

"மிஸ்டர்.கரிகாலன், உங்கள் எமொஷனல் பாலஸ் ரொம்பவே வீக்'காக இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், தற்கொலை மனநிலைக்கு போய் போய் வருகிறீர்கள். மார்ஸ்'ஸில் உங்களுக்கு என்ன நடந்தது?"

"அவள்.. நந்தினியை பார்த்தேன். நிர்தாட்சன்யமாக என் காதலை நிராகரித்தாள்."

கல்கி தன் டிஜிட்டல் சிரிப்பை உதிர்த்தார். "இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த மனிதர்கள்  காதலில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது." 

குந்தவை எரிச்சலானாள். "டாக்டர், இவன் சும்மா இல்லாமல் பாரில் நந்தினியின் லிவ்-இன் பார்ட்னர் மூக்கை உடைத்திருக்கிறான். பின்னர், தூக்கி வைத்தா கொஞ்வாள்?"
 
கரிகாலன் உறுமினான். "அவள் என்னவள்!!!"

டாக்டர் பதட்டப்படாமல், "வாரத்துக்கு நாலு லவ் கேஸு வருது. என் ஹீயரிங் வால்யூமை குறைக்க வேண்டி இஞ்சினியருக்கு எழுதியிருக்கிறேன்."

குந்தவை, இப்போது டாக்டரை பாவமாக பார்த்தாள் 

"மிஸ்டர் கரிகாலன், சில மாத்திரைகள் தந்து ஆக்ஸிடாக்ஸின் சுரப்பதை குறைத்தால், நந்தினியை உங்கள் மூளையிலிருந்து தூக்கிவிட முடியும். டோப்போமைன் ஹார்மோன் வேறு தாறுமாறாக.. "

கரிகாலன், மீண்டும் க்ளினிக் அதிர கத்தினான்.

"எதையாவது செய்யுங்க... எனக்கு தூங்கினா போதும்."

டாக்டர், கரிகாலனை படுக்க வைத்து, சில வயர்கள், கொஞ்சம் மின்சாரம், சிரிஞ்சில் மருந்து என்று கலவையாக வைத்துக்கொண்டு அவன் மூளைக்குள் விளையாடினார்.

பத்து நிமிடம் கரைய..

"இப்ப நீங்க போகலாம். உங்க மூளைக்குள் காதல், தற்கொலை எண்ணம் இரண்டுமே காணாம போயாச்சு" க்ளவுஸை கழட்டி குப்பைக்குள் வீசினார்.

கரிகாலன் சோர்வாக உணர்ந்தான். குந்தவையை பார்க்க எரிச்சலாக இருந்தது. அவள் கையை உதறிவிட்டு ரோட்டில் இறங்கினான். 

"அண்ணா.. மார்ஸிலிருந்து ஸ்பேஸ் க்ராஃப்ட் வருது.. "என்று அவள் கத்தியது முழுவதுமாக அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

-----
விக்னேஸ்வரி சுரேஷ்

No comments:

Post a Comment